வஸீலா தேடலாமா?
அவுலியாக்களிடம் வஸீலா தேடுதல், உதவி தேடுதல், இரட்சிப்புத் தேடுதல், நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தர கேட்டல் முதலியன வெல்லம் கூடாது - அவை ஷிர்க்காகும் என்று விஷயம் அறியாதவர்கள்தான் கூறித் திரிகிறார்களென்றால், அதை மனதுக்குள் வெறுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாரிசுகள் எனப் பாத்தியதை கொண்டாடும் மௌலானா மௌலவிகள், அந்த ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்திருப்பார்களானால் மேன்மையாக இருக்கும். அதை விடுத்து, விஷயமறிந்த அவர்கள் வாய்பொத்தி பாராமுகமாக இருப்பது தருமமன்று.
"அவுலியாக்களை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் கிருபாகடாட்சம் உண்டாகின்றது. நாட்ட தேட்டங்கள் கைகூடுகின்றன" என்பதாய் ஸையிதுல் ஆரிபீன் ஹஜரத் அபுல் காஸிம் ஜுனைதுல் பகுதாதி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.
"அவுலியாக்களிடத்தில் உதவி யொத்தாசை தேடலாம் என்று பலமான ஆதாரங்களைக் கொண்டு ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, அவுலியாக்களிடத்தில் உதவி தேடக்கூடாது என்று இக்காலத்தில் ஒரு நவீன கூட்டம் ஏற்பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்துடன் ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷிஅத்துல் லம்ஆத்-தர்ஜுமா மிஷ்காத்' 3-வது பாகத்தில் தெளிவுபடக் கூறியிருப்பதாக 'பஸ்லுல் கித்தாப்' 119-வது பக்கத்தில் ஷைகு ஷாஹ் முஹிய்யத்தீன் சாஹிபு வேலூரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
அன்பியா, அவுலியாக்களைக் கூப்பிட்டு உதவி இரட்சிப்புத் தேடுவது ஸஹாபாக்கள், தாபியீன்கள், ஸாலிஹீன்கள், முஜ்தஹிதான, உலமாக்கள் ஆகியோர்களுடைய கிரியைகளைக் கொண்டு ஆகுமென்பது ஸ்திரமாக்கப் பெற்றிருக்கின்றது. இதை இன்கார் செய்வது அறியாமையாகும்" என்பதாய் மதறாஸ் முப்தி அல்லாமா மஹ்மூது சாஹிபு அவர்கள் பத்ஹுல் ஹக் 62-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
ஆண்டவனின் பிரதிநிதியும், மானிடவர்க்கத்தின் ஆதி தந்தையுமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மலக்கூத்துடைய ஆலத்திலிருக்கையில் அல்லாஹ்வின் கட்டளையை வெளிரங்கத்தில் மீறி நடந்தபோது அவர்கள் நாஸுத்துடைய ஆலமாகிய இவ்வுலகில் இறக்கப்பட்டார்கள். அன்று முதல் சுமார் முன்னூறு வருடங்கள் தமது குற்றத்தை மன்னிக்குமாறு ஆண்டவனிடம் பிழை பொறுக்கத் தேடியும் அங்கீகரிக்கப்படவில்லை. நபி முஹம்மது முஸ்த்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வஸீலாவை கொண்டு பாவமன்னிப்பு அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டானபோது "இறைவா (முஹம்மது ஆகிய) இந்தப் பிள்ளையின் பொருட்டால் (ஆதம் ஆகிய) இந்தத் தகப்பனுடைய பிழையைப் பொறுத்தருள்வாயாக" என்று வஸீலா (சிபாரிசு) தேடினார்கள்.
உடனே, அவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கப் பெற்றது என்று ஹாக்கிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸஹீஹு முஸ்த்தத்ரக்கிலும், பைஹக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தலாயிலுன்னுபுவ்வாவிலும் ரிவாயத்துச் செய்துள்ளார்கள்.
ஸுபுஹான மவுலிதுடைய முதல் ஹிக்காயத்திலும், மற்றும் பிரபலமான கிரந்தங்களிலும் இவ்விபரம் கூறப்பட்டுள்ளது.
இன்னமும், "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா, ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியதன் பொருட்டால் ஆண்டவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிருபை செய்தான்" என்று நபி கரீம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டுள்ள ரிவாயத்து, தப்ஸீரு துர்ருல் மன்தூரில் இமாம் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.
மேலும், "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா, ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களைக் கொண்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஸீலாத் தேடியதை முன்னிட்டு அவர்களின் தவுபா ஒப்பக்கொள்ளப்பட்டது" என்பதாய் நுஸ்ஹத்துல் மஜாலிஸ் 2-வது பாகம், 307-வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
இன்னமும் பலமான ஸனதைக் கொண்டு, முஹத்திது தப்றானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரிவாயத்துச் செய்கிறார்கள்.
என்னவெனில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக் கேட்கும் பொழுது தங்களுடைய ஹக்கைக் கொண்டும் தங்களுக்கு முன்னுண்டான நபிமார்களது ஹக்கைக் கொண்டும் துஆக் கேட்டிருக்கிறார்கள்.
அகில உலகத்திற்கும் அருட்கொடையாகவும், சகல படைப்புகளையும் மன்றாடி கரை சேர்த்து இரட்சிக்கும் வள்ளலாகவும் அவர்கள் இருந்தும் அவர்களே தங்களைக் கொண்டும், மற்றும் நபிமார்களைக் கொண்டும் வஸீலா தேடி இருக்கிறார்கள். மற்றோர்கள் எப்படி அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமலிருக்க முடியும்! இவ்விதம் இமாம் ஸுபுக்கி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய ஷிபா உஸ்ஸிகாம் என்ற நூலிலும், இமாம் இபுனு ஹஜருல் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய ஜவ்ஹருல் முனள்ளம் என்ற நூலிலும் சொல்லப்படுவதாக "அபுளலுஸ் ஸலவாத்து" என்ற கிரந்தத்தில் எடுத்துரைக்கப்படுகிறது.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், அல்லாஹ்வுக்கு கலீபாவும், ஆதிநபியும், ஆதிபிதாவுமான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆண்டவனுடைய ஓர் ஏவலுக்கு வெளிரங்கத்தில் மாறு செய்த ஒரு குற்றத்தை வஸீலாவின்றி மன்னிக்கப்படவில்லை என்றால், கால முழுவதும் கணக்கற்ற குற்றங்கள், பாவங்கள் புரிந்து வரும் நம்போன்றவர்கள் அன்பியா, அவுலியா, காமிலீன்களின் வஸிலாவின்றி ஈடேற்றம் அடைவது எங்ஙனம்? என்பதேயாம்.
(யா அய்யுஹல்லதீன ஆமனுத்தகுல்லாஹ-வப்த்தகூ இலைஹில் வஸீலத்த....)
"ஓ, ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், மேலும், அவனளவில் வஸீலா தேடிக் கொள்ளுங்கள்" என்பதாக இறைவன் தனது பரிசுத்தத் திருமறையில் கூறியுள்ளான். (5:35)
"ஆணடவனளவில் சேருவதற்கு வஸீலாவை கொண்டேயல்லாமால் வேறு வழியில்லை. வஸீலாவின் தாத்பரியம் அவுலியா காமிலீன்களே" என்;று மேறசொன்ன திருமறை வசன விளக்கத்தில் தப்ஸீர் ரூஹுல் பயான் 2-வது பாகம் 388-வது பக்கத்தில் வியாக்கியானம் செய்யப் பெற்றிருக்கின்றது.
எவனுக்கு (றஸுலுல்லாஹ் மீது) மஹப்பத்து இல்லையோ அவனுக்கு ஈமான் இல்லை" என்பதாகவும் ஹதீது வந்துள்ளது.
"என்னுடைய றஹ்மத்து உடைய கூட்டத்தார் (அவுலியாக்) களிடத்தில் உங்களுடைய தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற ஹதீதை பைஹக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஸுனன் குப்றாவிலும் தப்றானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் முஃஜம் அவ்ஸத்திலும், அபீஸயீது குத்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்கிறார்கள். இந்த ஹதீதையே இமாம் மனாவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹு ஜாமிஉஸ்ஸகீர் 1-வது பாகத்திலும், முல்லா அலி காரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹுஐனுல் இல்மிலும் எடுத்துரைத்துள்ளார்கள்.
"நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்கள் சிலர் இருக்கின்றார்கள், ஜனங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே அவன் அவர்களைச் சொந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். தங்களுடைய தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வதற்காக ஜனங்கள் அவர்களை அண்டுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள்" என்ற ஹதீது இபுனு உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு தபறானியில் வருவதாக அல்ஜாமிஉஸ்ஸகீர், 1-வது பாகம், பக்கம் 78ல் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
(இதா தஹய்யாத்தும் பில் உமூர்p,
பஸ்;த்தயீனூமின் அஹ்லில் குபூரி)
"கருமங்களில் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுருகளை உடையவர்களை (அவுலியாக்களைக்) கொண்டு உதவி தேடிக் கொள்ளுங்கள்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீது, அப்துல்லாஹ் இபுனு மஸ்வூது ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு முஹத்திது இபுனு அபித்துன்யா கர்ஷீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு (வபாத்து ஹிஜ்ரி 281) அவர்கள் ரிவாயத்துச் செய்வதாக, தஸ்ரீஹுல் அவ்தக் - தர்ஜுமா ஷரஹு பர்ஜக் பக்கம் 319-ல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இன்னமும், மேலே குறிப்பிட்ட ஹதீது பற்றி ஸிராஜுல் முஃமினீன், ஷரஹுஐனுல்இல்மு, ஹரஹு பர்ஜக், கஜானத்துல் ஜலாலீ, பதாவா ஸாதுல்லபீப் முதலிய கிரந்தங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது, என்பதாக துல்பகார் ஹைதரிய்யா 213-வது பக்கத்தில் முற்காலத்து முப்தீ முப்தில் பாஜில் ஹைதர் ஷாஹ் காதிரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், ஷரஹுஐனுல் இல்மு 53-வது பக்கத்தில் இமாம் முல்லா அலி காரீ மக்கி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும், தப்ஸீர் ரூஹுல் பயான், 5-வது பாகம், 380-வது பக்கத்தில் உம்தத்துல் முபஸ்ஸிரீன் ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பரூஸி ரூமி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் தஸ்ரீஹுல் அவ்தக்பீ தர்ஜுமா ஷரஹுல் பர்ஜக் 319-வது பக்கத்திலும் ஆதாரத்துடன் கூறுகின்றார்கள்.
மேற்கண்ட ஹதீதை குத்வதுஸ் ஸாலிக்கீன், ஸுப்தத்துல் ஆரிபீன், சுல்தான் பாஹு வலிய்யுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் முஹ்கமுல் புகராவில் எடுத்தறிவித்திருப்பதுடன், "அவுலியாக்கள் பூமியின் கீழ் தனித்து கல்வத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அச்சமென்பதில்லை. அவர்கள் ஆண்டவனோடிருக்கிறார்கள். மனு, ஜின் யாராகட்டும், தேவையுடையவர்கள். விஷயத்தையுடையவர்களான அவுலியாக்களின் கபுரு (சமாதிக்குழி) களுக்குச் செல்லட்டும்! அப்படிப் போகின்ற அவர்களுடைய கஷ்டங்களெல்லாம் நீங்கி இலகுவாகிவிடும்" என்பதாகக் கூறியுள்ளார்கள்.
"மானிடனுக்கு ஏதாவது கஷ்ட நஷ்டம் ஏற்பட்டால் அவன் அவுலியா உல்லாக்களில் ஒருவரைக் கூப்பிட்டு உதவி தேடட்டும். அந்தவலி உயிரோடிருந்தால் நொடிப்பொழுதில் காற்று அவருக்கு எட்டிவைக்கும். அல்லது அவர் ஞானதிருஷ்டி (கஷ்பு) மூலம் தெரிந்துகொள்வார். ஆவர் மரணித்துப் போயிருந்தால் வானவர் (மலக்கு) அவருக்கு அறிவித்து வைப்பார். அவர் ஆண்டவனிடத்தில் சிபாரிசு தேடி நிவர்த்தி செய்து தருவார். இவ்வாறு காமிலீன்கள் கூட மலக்கின் அறிவிப்பின்றி தாங்களாகவே கேட்டுக்கொள்கின்றார்கள்" என்று ஹதீதில் வருவதாக ஷரஹு பர்ஜக்கில் காணப்படுகிறது என்று பத்ஹுல் ஹக்கு 101-வது பக்கத்தில் சொல்லப்படுகிறது.
"எவருடைய கால்நடைப் பிராணியாவது காணாமற் போய்விட்டால், 'அல்லாஹ்வின் அடியார்களே, அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக, தாங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள்" என்பதாக உள்ள ஹதீதை இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறது என்று ஹிஸ்னுன் ஹஸீனில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏவருடைய கால்நடைப் பிராணியாவது காட்டின் பக்கம் விரண்டோடி விட்டால், "அல்லாஹ்வின் அடியார்களே அதைப் பிடித்து நிறுத்துங்கள் - அல்லாஹ்வின் அடியார்களே - அதைப்பிடித்து நிறுத்துங்கள் - அல்லாஹ்வின் அடியார்களே அதைப்பிடித்து நிறுத்துங்கள் என்று கூவி அழைக்கட்டும் என்பதாக உள்ள ஹதீது, இபுனு மஸ்வூது ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு ரிவாயத்துச் செய்யப்படுகிறதாகவும் மேற்படி ஹிஸ்னுன் ஹஸீன் கிரந்தத்தில் வரையப்பட்டுள்ளது.
"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! என்று கூறட்டும்" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியிருக்கும் ஹதீது தப்றானீ-ஹிஸ்னுன் ஹஸீன்-ஸஹீஹ் இபுனு அவானா முதலான கிரந்தங்களில் வந்துள்ளன.
இது பற்றி ஆதாரம் 'வஸீலா ஜலீலா' பக்கம் 108லும் ஷதுரருஸ்ஸனிய்யா-பீ-றத்தி அலல் வஹ்ஹாபிய்யா பக்கம் 33-லும், 'பஸ்லுல்-கித்தாபு' பக்கம் 132 லும் பத்ஹுல் ஹக்கு பக்கம் 71 லும் வரையப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட ஹதீதுகளில் காணப்படும் (இபாதுல்லாஹ்) அல்லாஹ்வுடைய அடியார்கள் என்பதற்குக் கருத்து முஸ்லிமான மனிதர்கள் - முஸ்லிமான ஜின்கள் - மலக்குகள் - ரிஜாலுல் கைபு - (மறைந்து வாழும் மனிதர்கள்) - அப்தால்கள் - அவுத்தாதுகள் - குத்புமார்கள் முதலியவர்களே. இவர்கள் உயிரோடிருப்பினும் சரியே, மரணித்திருப்பினும் சரியே இவர்களை அழைத்து உதவி தேடிப் பெறுதல் ஆகும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட ஹதீதுகளே போதிய ஆதாரங்களாகும் என்பதாய 'இஹ்காக்குல்ஹகாயிகு' என்ற நூலில் வரையப்பட்டிருப்பதாக, சென்னைப் பிரதம முப்தீ மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லலா சாஹிபு கவர்ன்மெண்டு சீப் காஜீ அஹ்ல ஸுன்னத்து வல்ஜமாஅத் அவர்களது பத்வா - தர் - பயானே - ஜவாஸ் இஸ்த்திம்தாது - அன்பியா - வ - அவுலியா உல்லாஹி எனும் பத்வாச் சான்றும், 'வஸீலா ஜலீலா', பத்ஹுல்ஹக்கு முதலிய நூற்களும் கூறுகின்றன.
மேலும் இவ்வாறான அத்தாட்சி 'பரக்காத்துல் இம்தாது - லி - அஹ்லில் - இஸ்த்திம்தாத்' என்ற நூலிலும் காணப்படுகின்றது.
"காபிர்கள் விக்ரகங்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்கி, தங்களது தேவைகளை அவைகளே சுயமாக நிறைவேற்றுகின்றன என்று கருதி அவற்றின்பால் உதவி தேடுகிறார்கள். முஸ்லிம்களே அன்பியா, அவுலியாக்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்கிவைக்காமல் ஆண்டவனது அஸ்மா ஸிபாத்து வெளியாகும் மள்ஹர் ஆகக் கருதி, அவர்களிடம் உதவி தேடுகிறார்கள்.
விக்கிரகங்களைக் கூப்பிட்டவர்கள் நஷ்டவாளிகளாயினர். அன்பியா அவுலியாக்களைக் கூப்பிட்டவர்கள் ஜெயம் பெற்றவர்களாயினர்" என்று குத்வத்துஸ் ஸாலிக்கீன், மௌலானா, அல்ஹாஜ் ஸெய்யிது ஷாஹ் உமர் ஸாஹிபு காதிரி ஹைதராபாதீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தப்ஸீர் கஷ்புல் குலூபில்' வரைந்துள்ளார்கள்.
ஷாபியீ மதுஹபின் இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸுஷ் ஷாபியீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் செய்யதுனா இமாம் மூஸல் காலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுருஷரீபுக்குச் சென்று ஜியாரத்துச் செய்யும் போது அந்தச் சங்கையான கபுரை நோக்கி, "நிச்சயமாக இது பிராத்தனைகளை ஏற்று ஒப்புக்கொள்ளப்படும் என்று அனுபவத்தில் பரீட்சிக்கப் பட்ட ஒளடதமாகும்" என்று உரைத்தார்கள்.
இவ்விவரத்தை அல்லாமா ஷெய்கு அப்துல் ஹக் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷி அத்துல் லமஆத் தர்ஜுமதுல் மிஷ்காத்' 1-வது பாகம், 633-வது பக்கத்திலும், இமாம் இபுனு ஜௌஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'ஸப்வத்துஸ்; ஸப்வா' விலும், ஷெய்கு முஹம்மது மள்ஹர் நக்ஷபந்தீ திஹ்லவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'துர்ருல் முனள்ளம்' விலும் கூறுவதாக, முப்தீ அல்லாமா மஹ்மூது சாஹிபு மத்றாஸி அவர்கள் ஸில்குல் முஅள்ளம், 38-வது பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்கள்.
"இமாமுல் அஃளம் ஸெய்யிதுனா அபூஹனீபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய கபுரு ஷரீபு திட்டமாக நமது முறைப்பாட்டைக் கேட்டு தேவைகளை நிறைவேற்றிதர வல்லதாயிருக்கின்றது" என்பதாக, கல்லுடைந்தாலும் சொல்லுடையாத அல்லாமா இமாம் இபுனு ஹஜர்மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'கைராத்துல் - ஹிஸானில்' கூறுவதாக, அல்லாமா முப்த்தீ மஹ்மூது ஸாஹிபு மதறாஸீ அவர்கள் பத்ஹுல் ஹக்கு 78 வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
"இமாம் ஷெய்கு மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பரகத்துச் செய்யப்பட்ட மனிதர்களுள் மேலானவர்கள். ஆவர்களது கபுரு ஷரீபு நிச்சயமாகப் பரீட்சித்து சோதனை செய்யப்பட்ட அவிழ்தமாகும். ஏவரொருவர், அந்தக் கபுரு ஷரீபிலிருந்து (தமது துன்பம், துயர் விலக வேண்டுமென்ற எண்ணத்துடன்) யாதொரு வஸ்த்துவை எடுப்பரேல் அவரது பலாய் முஸீபத்துகள் நிவர்த்தியாக்கப்படும்" என்பதாக, ஷைகுல் இஸ்லாம், ஐக்கரிய்யல் அன்ஸாரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் "ரஹுரிஸாலத் தில்-குஷைரிய்யா'வில் குறிப்பிட்டுள்ளதாக, ஆரிபுபில்லாஹ், ஷாஹ் முஹிய்யித்தீன் ஸாஹிபு வேலூரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷபஸ்லுல்-கித்தாப் 115-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
ஹஜ்ரத் ஷெய்கு மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது வபாத்து ஹிஜ்ரி 201. அவர்களது அடக்கத்தலம் பகுதாதில் இருக்கிறது. அவர்கள் வேண்டுகோளுக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள். அவர்களது கபுரு ஷரீபைக் கொண்டு பகுதாது வாசிகள் பிணி நோய் நீங்க ஷிபாவைத் தேடிப்பெறுகின்றனர். அந்தக் கபுரு ஷரீபு அனுபவபூர்வமாகப் பரீட்சிக்கப்பட்ட சஞ்சீவியாகும்" என்று இமாம் அபுல்காஸிம் குஷைரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஷைகுல் இஸ்லாம் ஐகரிய்யல் அன்சாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு இருவரும் தங்கள் ரிஸாலாக்களில் வரைந்திருப்பதாய், அல்லாமா முப்த்தி மஹ்மூது ஸாஹிபு மதறாஸீ அவர்கள் 'பத்ஹுல்ஹக்கு 80-வது பக்கத்தில் எடுத்து அறிவிக்கின்றார்கள்.
இவ்வாறாக இமாம் யாபியீ யமனி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் சொல்வதாக அல்லாமா ஷைகு யூசுபு நபஹானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'ஜாமிஉல் கறாமத்தில் அவுலியா' 2வது பாகம் 267-வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
குத்புல் அக்பர், ஷைகு அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களது 5-வது கலீபா, அல்குத்பு ஸெய்யிது ஷம்சுத்தின் ஹனபிய்யில்-ஹமவிய்யிஷ்-ஷாதுலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தங்களது வபாத்தின் வேளையில், "தேவையுள்ள எவரும் என்னுடைய கபுருக்கு வந்து அவரது நாட்டங்களைக் கேட்பரேல் அவற்றை நான் நிறைவேற்றித் தருவேன். ஏனெனில் எனக்கும் (தேவையைக் கோரும்) அவருக்கும் இடையில் ஒரு முளம் மண்ணே தூரம். தன்னைச் சார்ந்தவர்களை ஒரு முளம் மண் தடுக்குமெயானால் அவன் ஆண் பிள்ளையன்று" என்று சொன்னதாக அல்குத்பு இமாம் அப்துல்-வஹ்ஹாபுஷ் ஷஃறானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'தபகாத்துல்-குப்றா' 2-வது பாகம், 86-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
அல்குத்பு ஷெய்கு முஹம்மது இபுனு அஹ்மது பர்கல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், "நான் கபுரிலிருந்து வெளிவந்து உலாவக் கூடிய தஸர்ருபாத்தெனும் சக்தியை உடையவன். எவருக்கேனும் ஹாஜத்து நாட்ட தேட்டம், இருக்குமானால், என் முகத்திற்கெதிரே வந்து, என்னிடத்தில் தேவைகளைக் கேட்பாராயின், நான் நிறைவேற்றித் தருவேன்" எனக் கூறியிருக்கிறார்கள் என்பதாக இமாம் ஷஃரானீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், தபக்காத்து, 2-வது பாகம், 93-வது பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
'எவரொருவருக்கு தமது தேவைகள். நாட்ட தேட்டங்கள், நிறைவேற வேண்டுமென்றிருக்குமானால், அவர் ஸுரத்துல் பாத்திஹா, ஆயத்துல் குர்ஸீ, அலம் நஷ்ரஹ்ஸுரா இவைகளை ஓதி, அவற்றின் தவாபை குத்புல் அக்த்தாபு, ஹஜ்ரத் அஷ்ஷைகு அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு அளிக்கவேண்டும், பிறகு பகுதாது திசையை முன்னோக்கி பதினொரு எட்டெடுத்து வைத்து, 'யா ஸெய்யிதீ அப்துல் காதிர்' என்று பத்து விடுத்தம் அழைத்து வேண்டி, தமது நாட்ட தேட்டங்களைக் கேட்க வேண்டும்" என்பதாய் இமாம் ஷெய்கு ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'கித்தாபுர்-ரஹ்மா-பித்திப்பி-வல்-ஹிக்மா' என்ற நூலின் 284-வது பக்கத்தில் உரைத்துள்ளார்கள்.
மேலே கண்ட விஷயங்களை நாம் இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைத் தொகுத்துக் கொடுத்து 'மதுஹபு'வை ஏற்படுத்தித் தந்த இமாம் ஷாஃபீயி முஹம்மது இபுனு இத்ரீஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு சட்ட நிபுணர்களாகிய இமாம் இபுனுஹஜர் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு, இமாம் குஷைரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு, இமாம் ஜக்கரிய்யல் அன்ஸாரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகியவர்களும், அல்குத்பு ஷம்சுத்தீன் ஹமவீ மிஸ்ரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அல்குத்பு முஹம்மது இபுனு அஹ்மது பர்கல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய குத்புமார்களும் கபுருகளைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியுள்ளார்களென்றால் நோய் நீங்கவும், வறுமை விலகவும், வியாபாரம் விருத்தியாகவும், நாடு செழிக்கவும், நிக்காஹ் முதலான நல்ல காரியங்கள் மங்களமாய் நடைபெறவும், இன்னும் இவை போன்று நேர்மையான நாட்டங்களையும், தேவைகளையும் தாராளமாக வஸீலா மூலம் கேட்டுப் பெறலாம். ஏன் வஸிலாவாகக் கேட்டுப் பெறக்கூடாது என்பதே.
இவையனைத்திற்கும் மேம்பட்டு, அவுலியாக்களுக்கெல்லாம் அரசரான, அல்குத்புர் ரப்பானீ, வல் கௌதுஸ் ஸமதானீ ஸெய்யிதுனா முஹிய்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'ஐய்னிய்யா'வில் கூறியுள்ளதைப் புத்திசாலிகள் படித்துப் பயனடைவார்களாக.
அவர்கள் உபதேசித்துக் கூறுவது யாதெனில்:-
"நீ ஓதிப் படித்த புத்தகங்களை விட்டுவிடு. ஏனெனில் அந்த அவுலியாக்களுடைய நடப்புக்கள் அநேகக் கித்தாபுகளில் நின்றுதான் ஏற்பட்டுள்ளன. எங்களுடைய வழிக்கும் அந்த அவுலியாக்கள் தான் வழிகாட்டிகள். நாம் ஆதரவு வைப்பதற்கு அன்னவர்களே போதுமான புதையல்கள்.
அந்த அவுலியாக்களைப் பின்பற்றியவன் நேர்வழி பெறுவான். எவன் பின்பற்றவில்லையோ அவன் வழிகெட்டான்.
ஆபிதீன்கள் எல்லோரும் அந்த அவுலியாக்களையே பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். அந்த அவுலியாக்கள்தான் மனிதரென மதிக்கப்படுபவர்கள்.
அவர்களின் திருச்சமுகத்தை நீ பற்றிப் பிடித்துக்கொள்.
உலகத்தார்கள் பிரதிப் பிரயோஜனங்கள் பெறுவதற்கு அந்த அவுலியாக்களே ஒதுங்கும் தலங்களாகும்" என்பதே.
அஷ்ஷெய்கு முஹிய்யித்தீன் இபுனு அறபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இமாம் பகுறுத்தீன் றாஜீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு உபதேசமாக எழுதியதாவது: யாதெனில்:-
"எம்மனிதன் உண்மை என சாதிக்க, தர்க்கவாதம் புரிவதை விட்டு வெளிப்படவில்லையோ, அம்மனிதன் அவுலியாக்களிடத்தில் ஒரு போதும் பூரண ஈமான் உடையவனாக மாட்டான். ஏனெனில், அந்த மனிதன் தான் கற்ற சொற்ப கல்வியை எல்லையில்லாததாகக் கண்டு, அந்த அற்பத்தையே துருவி ஆராய்வதில் தனது மேலான வயதைப் போக்கடிக்கிறான். அசல் நோக்கத்தை அடைந்தவனாக மாட்டான்" என்பதே.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஷைகு இஸ்ஸுத்தீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இருவரும் தகுதி வாய்ந்த சிறந்த இரு முஹத்திதுகள், இன்காருக்குப் பிறகே இவர்கள் அவுலியாக்களின் அந்தரங்கப் பேறுகளைப் பெற்றார்கள்.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹஜரத் அபூஹம்ஜா பகுதாதீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடைய மஜ்லிஸில் உட்கார்ந்த பிறகுதான் இமாம் அவர்களுக்கு அகக்கண்கள் திறந்தன.
இமாம் அஹ்மது இபுனு ஹம்பல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தமது குமாரருக்கு செய்யும் உபதேசத்தில், "மகனே! அவுலியாக்கள் பால் ஒரு பொழுதும் கெட்ட எண்ணம் கொள்ளாதே! அவர்களுடைய சகவாசத்தை ஒரு போதும் மறந்திருக்காதே! அவர்கள் அகமியத்தின் பொக்கிஷங்களை அறிந்தவர்கள், நாமோ, அவ்வாறு அறிந்திராத துரதிர்ஷ்டசாலிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷெய்கு இஸ்ஸுத்தீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, குத்புல் அக்பர் அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு உடைய சகவாசத்தால் பெரும் பேறுகளைப் பெற்றார்கள்.
"அவுலியாக்கள் தான் ஹகீகத்தை உடையவர்கள். அவர்களுடைய நேர்மைக்கு இதுவே போதுமான அத்தாட்சியாகும். மற்றவர்கள் வெறும் பழக்க வழக்கங்களில் அகப்பட்டுக் கொண்டு கிடக்கின்றனர்" என்று ஷெய்கு இஸ்ஸுத்தீன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
உண்மை இவ்வாறிருக்க, 'வஸீலா'வை நிராகரிக்கக்கூடிய வரம்பு மீறிய கூட்டத்தார்கள், அன்பியாக்களை, அவுலியாக்களை, யாரஸுலல்லாஹ்! யாவலிய்யல்லாஹ்! என்பன போன்ற சொற்களைக் கொண்டு அழைக்கக் கூடாது என பலமாக விவாதம் புரிகின்றார்கள். தங்களது குருட்டுத்தனமான இத்தகைய விதண்டாவாதத்திற்குச் சாதகமாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்தைத் தவறான முறையிலாக்கி தங்களுக்குச் சாதகமான ஆதாரங்கள் என மனப்பால் குடிக்கின்றனர்.
(பலா தத்ஊமஅல்லாஹி அஹதன்) என்ற 72:18 குர்ஆன் ஆயத்திற்கு, "எனவே, அல்லாஹ்வுடன் எவரையும் வணங்காதீர்கள்" எனவும்.
("வலா தத்உ மஅல்லாஹி இலாஹன் ஆகர லா இலாஹ இல்லாஹுவ) என்ற 28:88 குர்ஆன் ஆயத்திற்கு "அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை நீர் வணங்காதீர் அவனைத் தவிர்த்து (வணக்கத்துக்குரிய) நாயன் (வேறு) இல்லை" எனவும், ஸுன்னத்து வல்ஜமா அத்து முபஸ்ஸிரீன்கள் கருத்துத் தெரிவித்திருக்க வஸீலாவை நிராகரிக்கக்கூடிய மேற்சொன்ன, அகீதாப் பிசகிய கூட்டத்தார்கள், மேற்கண்ட இரு ஆயத்துக்களுக்கும் "நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் அழைக்கவேண்டாம்" எனவும், ஷநீர் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க வேண்டாம். அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய) நாயன் (வேறு) இல்லை" எனவும் அர்த்தம் கற்பித்து தங்களது விதண்டாவாதத்திற்கு ஆதாரங்காட்ட முற்படுகின்றனர். இவை போன்ற "லாதத்உ" என்று வரக்கூடிய மற்ற ஆயத்துக்களைக் கொண்டும் இவர்கள் இவ்வாறே மேறகோள் காட்டுகின்றனர்.
அழைத்தல், விளித்தல், கூப்பிடுதல் என்ற வார்த்தைகளுக்குரிய கருத்துடன் திருமறையில் 'துஆ' எனும் பதம் சில இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. 'வணங்குதல்' என்ற கருத்துடனும் திருமறையில் சில இடங்களில் 'துஆ' எனும் பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
'துஆ' எனும் சொல்லிற்கு இருவிதமான பொருட்கள் உள்ளன. வணக்கத்தைப் பொதிந்தில்லாத சாதாரண அழைப்பு, விளிப்பு, கூப்பிடுதல் என்ற வகைப் பொருள் ஒன்று.
இபாதத்து எனும் வணக்கத்தைத் தன்னுள்ளடக்கிக் கொண்ட பிராத்தனையான அர்த்தத்துடன் கூடிய பொருள் மற்றொன்று.
முந்திய வகை பற்றி இறைவன் தனது பரிசுத்தத் திருமறையில் (உத்வு இலாஸபீலி றப்பிக்கபில் ஹிக்மத்தி வல் மவ் இளத்தில் ஹஸனத்தி)
"(நபியே) நீர் உமது இரட்சகனுடைய பாதையின் பால் ஹிக்மத்தை (விவேகம்) கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக) என்று கூறுகின்றான். (16:125)
இவ்வசனத்தில் 'உத்உ' என்ற துஆப் பதம், வணக்கத்தைப் பொதிந்ததாயில்லாத அர்த்தத்தில் 'அழைப்பீராக' என்று வழங்கப்பட்டுள்ளது.
பிந்தியது பற்றி, வஸீலாவை ஆட்சேபிக்கும் பொருட்டு நிராகரிப்போர் அத்தாட்சியாக எடுத்துக் காண்பிக்கும் ஆயத்துக்களில் வணக்கத்தைப் பொதிந்துள்ள கருத்தில் பிரயோகிக்கப் பெற்றிருக்கும் துஆக்களைப் போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தை வணங்க வேண்டாமென்பதே. இப்பொருளையே வேறு ஆயத்துக்களும் விளக்கிக் காண்பிக்கின்றன.
"நீங்கள் அல்லாஹ்வை தவிர வணங்க (இபாதத்துச் செய்ய வேண்டாம்" (11:2, 11:26) என்றும்,
அவிசுவாசிகள் அல்லாஹ்வையன்றி தங்களுக்குப் பிரயோ ஜனத்தையாவது தங்கடத்தையாவது செய்ய இயலாதவற்றை (இபாதத்துச் செய்து) வணங்குகின்றார்கள். (10:18) என்றும், இவை போன்று இதர ஆயத்துக்கள் கூறுவதையும் சிந்தித்துச் சீர் தூக்கி ஆராய்ந்துண்ர்க!
எனவே, அன்பியா அவுலியாக்களை அழைத்துக் கூப்பிடுதல் கூடாது என்பதற்கு ஆதாரங்களாக எதிரிகள் கூறும் ஆயத்துக்களிலுள்ள 'துஆ' வானது, அல்லாஹ்வைத் தவிரவுள்ளவை தெய்வத் தன்மைக்கு உரித்தானவை, வணக்கத்திற்கு பாத்திரமானவை, என்று கருதியுள்ள அவிசுவாசிகள் விஷயத்தில் தான் பொருந்துமே யல்லாது, ஹகீகத்தில் எல்லாம் அல்லாஹ் ஒருவனைக் கொண்டே நடைபெறுகின்றன. தெய்வத்தன்மைக்கு தகுதியுடையான் வணக்கத்திற்குப் பாத்திரவான் அவனையன்றி வேறு எவருமில்லை என்று விசுவாசம் (ஈமான்) கொண்டுள்ள முஸ்லிம்கள் அன்பியா, அவுலியாக்களை விளித்து அழைக்கும் விஷயத்திற்கு முற்றிலும் பொருந்தாது என்பது யாருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயமாகும்.
"உங்களில் சிலர் சிலரை அழைப்பதே போல உங்களுக்கிடையில் றஸுலை அழைப்பதை நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்" என்ற (24:63) குறிப்புடன் கூடிய திருமறை வசனமொன்றுண்டு.
தப்ஸீர் காஜின் - தப்ஸீர் ரூஹுல்பயான் ஸாவீ முதலியவற்றில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இதன் தாத்பரியம் யாதெனில் உங்களுள் சிலர் சிலரை கண்ணியக் குறைவாகவும், சாதாரணமாகவும் அழைப்பதை போல நபி பெருமானார், றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்காமல் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், யா றஸுலல்லாஹ்! யா ஹபீபல்லாஹ்! யா நபிய்யல்லாஹ்! போன்ற அழகிய, கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைக்க வேண்டுமென்பதே.
சில சந்தர்ப்பங்களில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தல் இபாதத்திற்கு அவசியமானதாயும் ஆகி விடுகிறது.
(அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு)
"அருமை நபியவர்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக" என்று அவர்களை அழைத்தல் அத்தஹிய்யாத்தில் அவசியமான காரியமாகும். அத்தஹிய்யாத்து இவ்வழைப்பின்றி பூர்த்தியாகாது. அத்தஹிய்யாத்தின்றி தொழுகை பூர்த்தியாகாது. இதை கவனித்து நோட்டமிட வேண்டும்.
ஆகவே, முஸ்லிம்கள் கூப்பிட்டழைக்கும் விளிப்பு, அழைத்தல் சிலவேளை ஆகுமான காரியமாயும் சிலவேளை கட்டாயமான காரியமாயும் அமைந்துள்ளது என்பது மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு நன்கு தெரியவருகிறது.
அல்லாஹ்வை அழைப்பதற்கு துஆ என்றும், மற்றவர்களை அழைப்பதற்கு 'நிதா' என்றும் சொல்லப்படும். இந்தத் தாரதம்மியத்தை அறியாதபடி 'யாறஸுலல்லாஹ் - யா வலிய்யல்லாஹ் யா முஹிய்யத்தீன் - யா ஷைகு' போன்ற பதங்களால் அழைத்தல் ஆகாது என்பதாகத் தெரியாத தன்மை கொண்டு வஹ்ஹாபிகளான சிலர் கூறுகின்றனர்" என்பதாக ஹஜ்ரத் ஷாஹ் முஹிய்யித்தீன் ஸாஹிபு வேலூரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பஸ்லுல் கித்தாபில் இமாம்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள்.
மேலும் இத்தகைய விபரத்தை அல்லாமா முப்தீ மஹ்மூது ஸாஹிப் மதறாஸீ அவர்களும் பத்ஹுல் ஹக்கில் கூறியுள்ளார்கள். எனவே வஸீலாவை முன்னிட்டு அன்பியா, அவுலியா, காமிலீன்களை அழைத்துக் கூப்பிடுதல் ஒருக்காலும் இறை வணக்கமாய் மாறிவிடாது. ஷிருக்கும் அல்ல.
அஸ்ஹாபுஸ்-ஸுப்பாவிலுள்ள றபீஆ இபுனு கபுல் அன்ஸாரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் றிவாயத்துச் செய்கின்றார்கள்:-
"நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நானிருந்தேன். வுலுச் செய்வதற்குத் தண்ணீர், மிஸ்வாக்கு, சீப்பு வகையறாக்களை எடுத்துச் சென்று கொடுத்தேன். அச்சமயத்தில்; நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி இம்மை, மறுமைக்குரிய நலவான காரியங்களில் உனக்குத் தேவையானவற்றை என்னிடத்தில்கேள்" என்று சொன்னார்கள்.
"தங்களுடன் சொர்க்கத்திலாகி இருப்பதை ஆசிக்கின்றேன்" என்று கூறினேன்.
"இத்தோடு இன்னும் வேறென்ன தேவை?" என்று மீண்டும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள்;.
"இதேயல்லாது வேறொன்றும் தேவையில்லை" என்று உரைத்தேன்.
மேலே குறிப்பிட்ட ஹதீது ஸஹீஹு முஸ்லிம் - இபுனு மாஜா முஃஜம் கபீர் தப்ரானீ - அஷிஃ அத்துல்லமஆத் ஆகிய கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த ஹதீதில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உனக்குத் தேவையானதை என்னிடம் கேள். ஸுவால் செய் என்று கூறியது இம்மை, மறுமைப் பேறுகளை அளிப்பதைக் குறிக்கின்றது என்பதாக ஹதீதின் விரிவுரையாளர்கள் வரைகின்றார்கள்.
ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இந்த ஹதீதின் ஷரஹில், "இம்மையும் மறுமையும் உங்களால் கிடைத்த சன்மானத்தில் நின்றுமே உண்டானவை, மேலும், லவ்ஹுகலம் உடைய கல்வி உங்களின் ஞானங்களிலிருந்தே உண்டானவை.
(பஇன்ன மின் ஜுதிகத் துன்யா வளர்ரத்தஹா-வமின் உலூமிக்க இல்மல் லவ்ஹி வல்கலமி) என்று கஸீதத்துல் புர்தாவில் இமாம் பூஸரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
"ஆண்டவனுடைய உத்திரவு கொண்டு ஸர்வரே ஆலம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மை, மறுமையின் அருட்கொடை நிஃமத்துகளை அளிக்கின்றார்கள். அவ்வாறாக அளிக்க வல்லமையுடையவர்கள்" என்பதே ஸுன்னத் வல்ஜமாஅத்தாரின் விசுவாசமாகும்.
(அன காஸிமுன் வல்லாஹு யுஃத்தீ)
"கொடுக்கின்றவன் அல்லாஹ், பங்கு வைப்பவன் நான்" என்று ஸஹீஹ் புகாரியில் காணப்படும் ஹதீதை, இமாம் இபுனு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், ஷரஹு ஹம்ஸிய்யா, 192-வது பக்கத்தில் எடுத்துரைத்து "ஆண்டவன் தனக்குச் சொந்தமாயுள்ள உணவளித்தல் உள்பட அறிவு, ஞானம், வழிப்பாடு முதலிய எல்லாவிதமான பொக்கிஷங்களின் சாவிகளையும் தனக்குப் பிரதிநிதியும், (ஹபீபு) தோழருமான நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசம் கொடுத்திருக்கின்றான். அவர்கள் பங்கு வைத்துக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூலமாகவே சகலமும் அளிக்கப் படுகின்றன" என்பதாக கூறுகின்றார்கள்.
மேலும், புதூஹாத்துல் அஹ்மதிய்யா-பீ-மினஹில் முஹம்மதிய்யா, 89-வது பக்கத்தில், அல்லாமா ஷைகு சுலைமான் ஜமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் இப்படியே கூறுகின்றார்கள்.
"அல்லாஹ் ஒருவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் எந்தவித உதவியும் தேடவே கூடாது" என்ற வாதத்திற்குச் சிலர் இய்யாக்க நஃபுது-வஇய்யாக்க நஸ்த்தயீன்" என்ற (1:4) ஆயத்தை மேற்கோளாகக் காட்டுவதுடன், நபியோ, றஸுலோ, குத்போ, வலியோ யாருக்காயினும் லாபநஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டென்று நம்புவதும், அவர்களிடம் உதவி தேடுவதும் மாபெரும் குற்றம் என்பதாய் விரிவுரையும் கூறுகின்றனர். இது அவர்களது அறியாமையையே காட்டுகின்றது.
ஏனெனில், ஸுரத்துல் பாத்திஹா, அம்ரு-நஹீ, ஏவல்-விலக்கல், மஸாயில்களை விட்டும் நீங்கியது, அதில் கட்டுப்பட்டதல்ல" என்று தப்ஸீர் அஹ்மதிய்யா கூறுகின்றது.
"ஏவல், விலக்கல் (அம்ரு, நஹீ) உடைய ஆயத்துக்கள் குர்ஆனில் ஐந்நூறும், ஹதீதில் மூவாயிரமும் காணப்படுகின்றன. இய்யாக்க நஃபுது-வ-இய்யாக்க நஸ்த்தயீன்" என்ற (1:4) ஆயத்து அதில் சேர்ந்ததல்ல" என்று வஸீலா ஜலீலா, 46-வது பக்கத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் அதே பக்கத்திலேயே, உன்னை ஒருவனென்னு உறுதிகொண்டு உனது வணக்கத்திற்கு உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்பதே 1:4 ஆயத்திற்குப் பொருளாகும். என்பதாக ஸெய்யிதுனா இபுனு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு இக்ரிமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு ரிவாயத்துச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான விளக்க விபரத்தை ஸிராஜுல் ஹிதாயா 77-வது பக்கத்திலும், ஸாயிக்கத்துல் மவுத்துவஐனுல் ஹயாத்திலும், தப்ஸீர் மதாரிக்கிலும் காண்க.
ஆகவே, ஏவல் விலக்கலில் சேராத ஒன்றைச் செய்தல் ஆகுமென விளங்கக் கிடக்கின்றது. இந்த ஆயத்து ஏவல், விலக்கலுடையது அல்லவாகையால், அன்பியா அவுலியாக்கள் பால் உதவியொத்தாசைத் தேடக் கூடாதென்பதற்கு ஆதாரமாகாது, உதவி தேடக் கூடாதென்றிருக்குமெயானால் (வஸ்த்தயீனு பிஸ்ஸபுரி வஸ்ஸலாத்தி) - பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்" என்ற வேத வாக்கும், (வப்த்தகூ இலைஹில் வஸீலத்த) "அவனளவில் வஸீலாவைத் தேடிக்கொள்ளுங்கள்" என்ற (5:35) வேதவாக்கும் வந்திருக்காது. (உத்லுபல் ஹவாயிஜ இலாதவிர் ரஹ்மத்திமின் உம்மத்தீ) என்னுடைய றஹ்மத்து உடைய கூட்டத்தார் (அவுலியாக்) களிடத்தில் உங்களுடைய தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற ஹதீதும்.
(இதா தஹய்யர்த்தும் பில் உமூர்p பஸ்த்தயீனூ மின் அஹ்லில் குபூர்) "கருமங்களில் நீங்கள் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுருகளை உடையவர்களை (அவுலியாக்களை)க் கொண்டு உதவி தேடுங்கள்" என்ற ஹதீதும்.
"எவருடைய கால்நடைப் பிராணியாவது, காணாமற்போய் விட்டால், அல்லாஹ்வின் அடியார்களே, அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக, தாங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூப்பிட்டுக் கேளுங்கள்" என்ற ஹதீதும்.
"எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! எனக்கு உதவி புரியுங்கள்! என்று அவர் கூறட்டும்" என்ற ஹதீதும்,
மற்றும் இவை போன்ற ஹதீதுகளும் வந்திருக்கத் தேவையில்லை.
முஹக்கிகுல் ஹனபிய்யி, அஷ்-ஷைகு அப்துல்கனி நாபல்ஸீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், திமஷ்கு நகரில் ஸலீமா என்ற இடத்தில் குர்ஆன் ஷரீபுக்கு வியாக்கியான விளக்கம் செய்துக் கொண்டிருக்கையில், (யா அய்யுஹல்லதீன ஆமனூ இஸ்த்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி) 'ஓ, ஈமான் கொண்டவர்களே! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்!" என்ற (25:153) ஆயத்தைச் சுட்டிக்காட்டி, "ஆண்டவனைத் தவிர்த்துப் பிறரிடம், உதவி தேடக்கூடாது என்று சொல்கிறவனுக்கு இது ரத்தாகும், அப்படிச் சொல்கிறவன் காபிராகி விட்டான், ஏனெனில் குர்ஆனுடைய நஸ்ஸுக்கு (தெளிவாகவும், வெளிப்படையாகவும் வந்துள்ள ஏவலுக்கு) மாற்றமாக இருக்கும் காரணத்தினால், தேவைகள் நிறைவேற அவுலியாக்களைக் கொண்டு உதவி தேடுவதே சிறந்த வழியாகும்" என்று கூறினார்கள்.
விபரத்தை அல்லாமா ஷைகு யூஸுபுன் னபஹானீ, மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், 'வாஹிதுல் ஹக்கு 251-வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.
"ஜீவிய காலத்தில் உதவி தேடுவதற்கு எவர்கள் தகுதியானவர்களோ அவர்களிடம் வபாத்திற்குப் பிறகும் உதவி தேடலாம்" என்பதாக இமாம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம், கஸ்ஸாலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைக் கொண்டு அல்லாமா ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'அஷிஅத்துல் லமஆத்-தர்ஜுமா மிஷ்காத்' முதல் பாகத்தில் வரைந்துள்ளார்கள்.
"கஷ்ட காலத்தில் அவுலியாக்களிடத்தில் இரட்சிக்கும்படி உதவி தேடுதல் கூடுமா? என்ற இமாம் ஷஹாபுத்தீன் றமலீ ஷாபியீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடத்தில் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கமாவது:
"அன்பியா, அவுலியா, ஸாலிஹீன்களிடத்தில் இரட்சிக்கும்படி உதவிதேடுதல் கூடும். மவுத்துக்குப் பிறகும் அவர்கள் இரட்சிப்புத் தரக்கூடியவர்கள். ஏனெனில், அன்பியாக்களுடைய முஃஜிஸாத்தும் அவுலியாக்களுடைய கறாமாத்தும் மவுத்துக்குப் பிறகும் விடுபட்டுப் போக மாட்டா. அவர்கள் ஹயாத்துள்ளவர்கள். பர்ஜகுடைய ஆலத்தில் தொழவும் செய்கின்றார்கள். ஹஜ்ஜும் செய்கின்றார்கள். இவ்வாறு ஆதாரமான ஹதீதுகள் வந்திருக்கின்றன".
மேற் சொன்ன விபரம், அல்புதூஹாத்துல் அஹ்மதிய்யா 90-வது பக்கத்தில், அல்லாமா ஷைகு ஸுலைமானுல் ஐமல் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும். 'வாஹிதுல் ஹக்கு, 69-வது பக்கத்தில் அல்லாமா ஷைகு யூஸுபுன் னபஹானீ மிஸ்ரீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
"அவுலியாக்களிடத்தில் உதவிதேடும் விஷய சம்பந்தமாய் 'கஷ்பு' (கல்புக்கண்) உடைய மஷாயிகுகளைக் கொண்டுள்ள ரிவாயத்துக்கள் அநேகமுண்டு. இது பற்றி கிதாபுகளிலும், ரிஸாலாக்களிலும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லையாதலால் பிடிவாதமாக மறுப்பவர்களுக்கு அவை பிரயோஜனங் கொடுக்கமாட்டா. ஆகையால், அது பற்றி இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பிடிவாதத் தன்மையை விட்டும் ஆண்டவன் நம்மைக் காப்பாற்றிக் கொள்வானாக!" என்பதாக ஷைகுல் ஹிந்து, அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், 'அஷிஅத்துல் லமஆத் தர்ஜுமா மிஷ்காத்' பாகம் 3, பக்கம் 375-ல் கூறுகின்றார்கள்.
மக்ரீபு தேசத்தில் வலுப்பமான பகீஹாயும்;, பிரபல்யமான ஆரிபாயுமிருந்த ஸெய்யிது அஹ்மது இபுனு ஐர்ரூக்குஷ் ஷாதுலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:-
"அவுலியாக்கள் ஹயாத்தில் செய்யும் உதவி வலுப்பானதா? மௌத்திற்கப்பால் செய்யும் உதவி வலுப்பமானதா?" என்று ஷைகு அபுல் அப்பாஸ் ஹள்ரமீ அவர்கள் என்னிடம் வினவியதற்கு, மௌத்தான பின்பு அவர்கள் புரியும் உதவிதான் மிகவும் வலுப்பமானது" என்று கூறினேன். எனது இந்த விடையை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என்பதே.
விபரம் 'அஷிஅத்துல் லமஆத் தர்ஜுமா மிஷ்காத்' 1-வது பாகம் 633-வது பக்கத்தில் காணப்படுகின்றது.
"மௌத்திற்குப் பிறகு அவுலியாக்களிடத்தில் உதவி தேடலாமென்பது மிகுதமான மஷாயிகுமார்களின் தீர்மானமாகும்.
ஆரிபீன்களில், உலமாக்களில் மிகுதமான பேர்களுடைய அகீதா (நிர்ணயம்) இதுவேதான்" என்பதாக இமாம் ஷைகு அபூஸயீது ஸலமீ ஹனபீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஷரஹ் பர்ஜக்கில் கூறுகின்றார்கள்.
மேலும், அவர்கள் அதில் மௌத்தை இரு வகையாக விபரிக்கின்றார்கள்.
"மௌத்துக்குப் பிறது ரூஹு நித்தியமானது. அழிவற்றது. ஆனால் இந்த வெளிரங்கமான திரேகம் அழிந்துவிடும். இவர்கள் சாமான்யர்களான அவாம்கள். இவர்கள் பிறருக்கு உதவி செய்ய சக்தி பெற்றவர்கள் இது ஒருவகை. மௌத்திற்குப் பிறகு ரூஹும் அழியாது, உடலும் அழியாது. உள்ரங்கமான உயிருடலுடன் ஹயாத்துடனே என்றுமிருப்பர். இவர்கள் அன்பியா, அவுலியாக்கள், உயிரோடு இருப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்ய சக்தி பெற்றவர்கள். இது மற்றொரு வகை.
ஸஹீஹான ஹதீதுகளில் இதற்குப் பலமான ஆதாரங்களுண்டு. இதை எவரும் மறுக்க சக்தி பெற மாட்டார்கள்" என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
வஸீலா - சிபாரிசு - இஸ்த்திம்தாது - இஸ்த்திகாதா -இஸ்த்திஷ்பா -இஸ்த்தி ஆனா முதலிய பதங்கள் பலவிதமாக இருப்பினும் இவை கருத்தில் ஒன்றே.
ஒத்தாசை தேடல், சிபாரிசு தேடல், உதவி தேடல், இரட்சிப்புத் தேடல், நோய் நிவாரணம் பெறத் தேடல், உபகாரம் தேடல் முதலியன முறையே அவற்றின் பதப்பொருளாகும்.